Take a fresh look at your lifestyle.

தீவிர சிகிச்சையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் – முதல்வர் நேரில் சந்திப்பு

102

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல்நிலைக் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உடல்நலக்குறைவு காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மதியம் 1 மணியளவில் முதல்வர் மு.க ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இதேபோன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன். காங்கிரஸ் தலைவர்களில் மூத்த தலைவரான இவருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

75-வயதான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று மதியம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இன்று மதியம் 12.30 மணியளவில் தனியார் மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை எப்படி உள்ளது என்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது அவருடன் அமைச்சர் மா சுப்பிரமணியனும் இருந்தார். இதேபோன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையும் ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்வ பெருந்தகை, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு டாக்டர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். விரைவில் அவர் மக்கள் நல பணிகளை செய்வார் என்று கூறினார். செல்வப் பெருந்தகை கூறியதாவது, “ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் குணமடைந்து வருவார். வரும் 9 ஆம் தேதி நடக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அவரது குரலை கேட்பதற்கு, நாங்கள் எல்லாம் ஆர்வமாக இருக்கிறோம். கூடிய விரைவில் அவர் மீண்டும் மக்கள் பணிக்கு திரும்புவார். மருத்துவர்களும் நல்ல முறையில் அவரை கவனித்து வருகிறார்கள். ஏற்கனவே ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பேஸ்மேக்கர் கருவி வைத்திருக்கிறார்கள். இப்போது அவருக்கு மூச்சு விடுவதில் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்”.

“ஒரு வாரத்திற்கு முன்பு தான் அட்மிட் ஆகியிருக்கிறார். அப்போது நன்றாக தான் இருந்தார். நேற்று தான் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். நல்ல முறையில் சிகிச்சை அளித்து வரப்படுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் திரும்பி வருவார். இவ்வாறு அவர் கூறினார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் திருமகன் ஈவேரா. இவர் கடந்தாண்டு காலமானதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த இடைத்தேர்தலில், திருமகன் ஈவேராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்” என்று கூறினார்.